Home அரசியல் காரைக்குடி மேயர் பதவியை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

காரைக்குடி மேயர் பதவியை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

2

காரைக்குடி மேயர் பதவியை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையில் மிகப்பெரிய மோதல் நிலவி வருகிறது. தவெக சார்பாக திருமயம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிந்தாமணி ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேயர் வேட்பாளருக்கான தேடுதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாற்று கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை இழுக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

இதற்கு மாணிக்கம் தாகூரும் ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிகிறது. அதேபோல் சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி கரையாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் தீவிரமாக பணியாற்ற தொடங்கி இருக்கிறார். அண்மையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ஆர்.சுந்தர் ராஜன் திடீரென தவெகவில் ஐக்கியமாகினார். சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் அவர் தவெக பக்கம் சென்றது சிவகங்கை மாவட்டத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த அவர், தவெக பக்கம் நகர்ந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தாலும், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியை தங்கள் பக்கம் இழுத்திருப்பதை கார்த்தி சிதம்பரம் ரசிக்கவில்லை. இதனால் தவெக மதிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

இதனால் காரைக்குடி மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் குறியாக இருக்கிறது. அதற்கேற்ப மேயர் வேட்பாளரை தேடும் படலத்தை கார்த்தி சிதம்பரம் தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக இடங்களை கைப்பற்ற ஆலோசனை தொடங்கி இருக்கிறது.

மறுபக்கம் தவெகவிலும் காரைக்குடி மேயர் பதவியை குறி வைத்து பலரும் களமிறங்கி இருக்கின்றனர். திருமயம் தொகுதியில் தவெக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சிந்தாமணி மேயர் பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காரைக்குடியில் ஒரு பேரணியையும் நடத்தி இருந்தார்.

அதேபோல் அமைச்சர் பிரபுவும் தன்னுடைய ஆதரவாளரான ஐயப்பனை களமிறக்க பணிகளை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் காரைக்குடி மேயர் பதவியை கைப்பற்ற தவெக மற்றும் காங்கிரஸ் இடையில் பெரிய போட்டி நிலவி வருகிறது. மேயர் பதவியை கைப்பற்றினால் மட்டுமே மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று இரு கட்சியினரும் நம்புவதால், மோதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!