திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள பிரசித்திபெற்ற மலைக்கோயிலான பழநி தண்டாயுபாணி சுவாமி கோயில் கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
இருந்தபோதும் சுவாமிக்கு ஆறுகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த நிலையில் நாளை முதல் பழநி மலைக்கோயில் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்கப்படவுள்ளது.
இதையடுத்து மலைக்கோயில் அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
மலைக்கோயிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஆறு அடி இடைவெளியில் பக்தர்கள் நின்று தரிசனத்திற்கு காத்திருக்கும் வகையில் கட்டம் வரைந்து வருகின்றனர்.
மேலும் பழநி கோயிலுக்கு வருபவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு http://WWW.tnhrce.gov.in செய்து வரும் நடைமுறையும் விரைவில் கடைப்பிடிக்க உள்ளது.
இதன்மூலம் தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்தும், சானிடைசர் பயன்படுத்திய பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
முகக்கவசம் அவசியம் என்றும் அரசு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பக்தர்கள் வருகையால் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பழநி கோயில்நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.