தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார். புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தனின் மகனான இவர், அண்மைக்காலமாகப் புற்றுநோய் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டத்தின் வழியே அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தமிழ் மரபின் பெருமைகளைத் தனது தனித்துவமான பாணியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த இவர், இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பொம்மலாட்ட நிகழ்சிகளை நடத்தியுள்ளார். சென்னை பொதிகை தொலைக்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், மக்கள் தொலைக்காட்சியில் “கலை மாமா” என்ற தலைப்பில் 90-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்த் தொலைக்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கிப் புகழ்பெற்ற இவர், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காகப் பல நூறு பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, மூன்று திரைப்படங்கள் மற்றும் இரண்டு மெகா தொடர்களில் நடிகராக முகம் காட்டியுள்ள கலைவாணன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்துத் தனது பொம்மலாட்டக் கலை மூலம் சர்வதேச அளவில் தமிழ் மரபை நிலைநிறுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார்.

