Site icon News now Tamilnadu

அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்தில் மர்மம் : திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப்போல், தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ துரை சந்திரசேகரன் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு எளிமையானவர். (முன்னாள் முதல்வர்) ஜெயலலிதாவைப்போல் துரைக்கண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளதாக தெரிகிறது,” என்றார்.

ஏனென்றால், துரைக்கண்ணு இறந்தபிறகு அவருக்கு நெருக்கமானவர்கள் போலீஸாரால் கண்காணிக்கப்படுகின்றனர். அவரது ஆதரவாளர்கள் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். துரைக்கண்ணுவின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்படுவதற்கு முன், இருபதுக்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

எதற்காக இதெல்லாம் நடந்தது என்பது விரைவில் தெரிய வரும் என்றார் துரை.சந்திரசேகரன்.
ஸ்டாலின் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு போடப்போவதாக அறிவித்துள்ளது குறித்து செய்திளார்கள் கேட்டதற்கு, புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் பட்டியலை வெளியிட்டு உண்மையான தகவல்களை பேசினார் என்றும், இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் மீது விஜயபாஸ்கர் பொய்க் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளதாகவும் துரை.சந்திரசேகரன் தெரிவித்தார்.

Exit mobile version