இலுப்பூர்,
அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலையில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஒருவர் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியிலும் மற்றொரு நிர்வாகி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை அருகே உள்ள வானதிரையன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42). வழக்கறிஞர். இவர் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். இவர் பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமாரின் ஆதரவாளர். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக நான்காவது முறையாக விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு டாக்டர் சி விஜயபாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் சார்ந்த முத்தரையர் சமூகத்தின் 29 உட்பிரிவுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு சார்பில் விராலிமலை தொகுதியில் சண்முகசுந்தரம் போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது.இது பாஜகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு பாஜ புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வக்கீல் சண்முகசுந்தரம் மற்ற நிர்வாகி ஒருவரிடம் செல்போனில் பேசும்போது அன்னவாசல் வடக்கு பாஜக ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக தெரிகிறது. மேலும் மேற்கு மாவட்ட தலைவர் இராமச்சந்திரனையும் இழிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சண்முகசுந்தரத்திடம் பேசுவதற்காக அன்னவாசல் வடக்கு ஒன்றிய தலைவர் முருகையா மாவட்ட அமைப்புசரா தொழிலாளர்கள் பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் இளையராஜா மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கொடுமையான் மலையில் இருந்த சண்முகசுந்தரத்துடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கம் முருகையா இளையராஜா ஆகியோர் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளனர். சண்முகசுந்தரம் முத்துராமலிங்கத்தை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சந்தோஷ் சுந்தரம் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியிலும் முத்துராமலிங்கம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

