புதுக்கோட்டையில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி

951

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here