பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் விதவையர் திருமண நிதியுதவித் திட்டம். இது மணிமம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விதவைப் பெண், தனது மகளுடைய திருமணத்துக்கு நிதி உதவியுடன் திருமங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் பெறலாம்.
இதில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் கல்வித் தகுதி தேவையில்லை. மணப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. அதேபோல, இரண்டாவது பிரிவில் பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை மற்றும் 8 கிராம் தங்கம் கிடைக்கும்.
கணவரை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள தாய் தனது மகளின் திருமணத்தை நடத்துவதற்கு உதவுவதற்காக தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்குக் குறைவாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்துக்கு தகுதியானவர்.
ஆதார் கார்டு, 10ஆவது – 12ஆவது – பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், சமூக சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் அட்டை நகல், திருமண அழைப்பிதழ் நகல், விண்ணப்பதாரர் மற்றும் தாயின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. தாய் இறந்துவிட்டால் மணப்பெண்ணின் பெயரில் நிதியுதவி வழங்கப்படும்.