நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
’அவள் அப்படித்தான்’ படத்தில் கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழ், மலையாள மொழிப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உட்பட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சித்ரா.
திருமணத்துக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் குடும்பத்துடன் சென்னையில் செட்டிலாகிவிட்டார். சினிமா வாய்ப்புகள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே சினிமாவில் நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.அந்தப்படம் கடந்த 2020-ல் வெளியானது.
சித்ராவுக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டிலே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.